“விஜய் தனியாக யோசிக்கவில்லை; தூண்டி பேச வைத்துள்ளனர்” – திருமாவளவன்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில், அவர் சுயமாக யோசித்து பேசியது போல தெரியவில்லை. அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் தூண்டிவிட்டு இப்படிப் பேசச் செய்துள்ளனர். விஜய் ஒருநாள் சுயமாக சிந்தித்து, செயல் திட்டங்களை அமைத்துக் கொண்டால் மட்டுமே அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “செந்தில் பாலாஜி மட்டும் தான் குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் செய்த குற்றம் என்ன? ‘மக்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தான் தடியடி நடந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ என்று கேட்கிறார். இது முற்றிலும் அரசியல் நியாயமற்ற குற்றச்சாட்டு. உண்மையில் இது கூட்ட நெரிசல் உயிரிழப்புதான்.

ஒரு சதுர மீட்டரில் அதிகபட்சம் 4 முதல் 5 பேர்தான் நிற்க முடியும். ஆனால் அங்கு 10–15 பேர் இருந்துள்ளனர். பல மணி நேரம் காத்திருந்தனர். அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது 100% கண்கூடாக தெரியும் உண்மை. அதை மறைத்து சதி என்று கூறி, திமுக அரசுக்கு பழி சுமத்துவது தவறான அரசியல். இது அவருக்கே கேடு தரும்.

விஜய் இதை தனியாக யோசித்து பேசினார் என்று தோன்றவில்லை. அவரைச் சுற்றியவர்கள் தூண்டிவிட்டு இப்படிச் சொல்வித்துள்ளனர். விஜய் எப்போது தன்னால் சிந்தித்து, செயல் திட்டங்களை அமைக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் கிடைக்கும்.

பாஜக தரப்பில் இருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான அவசியம் என்ன? விஜயிடம் குற்றம் இல்லை, அரசு தான் தவறு என்று உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே பாதகமாக முடியும். எங்கள் கட்சித் தொண்டர்கள் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால், வழி கொடுப்பார்கள். ஆம்புலன்ஸ் வெறுமனே செல்கிறது, நோயாளியை ஏற்றி திரும்பும். இதை விட்டும் வாதம் செய்வது என்ன அரசியல்? இது நாகரீகமான முறையா?” என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

Facebook Comments Box