ஆயுதபூஜை முன்னிட்டு சென்னை சந்தைகளில் பரபரப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் பூஜைப் பொருட்கள் வாங்க வந்ததால், முக்கியமான சந்தைகள் அனைத்தும் கூட்டம்.

சென்னை கோயம்பேடு, பாரிமுனை, டி.நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் காலை முதலே மக்கள் பெருந்திரளாக வாங்கி சென்றனர். குறிப்பாக கோயம்பேட்டில் அக்டோபர் 5 வரை நடைபெறும் சிறப்பு சந்தையில், பொறி, கடலை, வாழை, இலை, தேங்காய், பல்வேறு பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றது.

ஆனால், பொருட்களுடன் பூக்களின் விலையும் அதிகரித்திருந்தது. அதன்படி:

  • மல்லி கிலோ ரூ.600 → ரூ.800
  • முல்லை ரூ.500 → ரூ.700
  • கனகாம்பரம் ரூ.400 → ரூ.800
  • அரளி ரூ.200 → ரூ.350
  • சாமந்தி ரூ.100 → ரூ.180
  • சம்மங்கி ரூ.100 → ரூ.200 ஆக உயர்ந்தன.

இதற்கிடையில், சில்லறை வியாபாரிகளும் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மெக்கானிக் கடைகளில் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையாக குவிந்தன. சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கவும் மளிகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்தது.

மாலை நேரங்களில் இறுதி நேர விற்பனை அதிக பரபரப்பாக நடந்தது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர், பண்டிகைக்காக ஊருக்குச் செல்லும் பயணிகள் என்பதால் முக்கிய சாலைகள் மற்றும் புறநகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற பேருந்து நிலையங்களில் மக்கள் பெருமளவில் கூடியதால், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் காந்தி ஜெயந்தி வருவதால் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில், பலர் ஊர்களுக்குப் பயணம் செய்தனர். முன்பதிவு செய்தவர்கள் எளிதாகப் பயணிக்க, முன்பதிவு செய்யாதவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தினார். சிறப்பு பேருந்து சேவை குறித்து பயணிகளிடமும் கேட்டறிந்தார். இதனுடன், மெட்ரோ ரயில்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது.

Facebook Comments Box