திருவள்ளூர் நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யும் முயற்சிகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான காரீப் கொள்முதல் சொர்ணவாரி பருவத்திற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) சார்பில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 5 நிலையங்களும், மொத்தம் 68 நிலையங்கள் இயங்கிவருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை 2,866 விவசாயிகளிடமிருந்து 22,735 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.53.31 கோடி தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“திருவள்ளூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்கள், மாவட்ட விவசாயிகளிடமிருந்தே நெல் வாங்க வேண்டும். பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்வது கண்டறியப்பட்டால், அதில் ஈடுபட்ட நிலைய பணியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.
புகார்களுக்கு, விவசாயிகள் மண்டல அலுவலக தொலைபேசி எண் 044-27664016 மற்றும் மொபைல் எண் 89252 79611 வழியாக தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.