‘கலைஞர் பல்கலைக்கழகம்’ மசோதா விவகாரம்: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு

கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ அமைக்கச் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

2025–26 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச்–ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ அமைக்கச் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல், ஆளுநர் அதை நிலுவையில் வைத்திருந்தார். பின்னர், குடியரசுத் தலைவரின் அனுமதி பெறும் நோக்கில் அதனை அனுப்பி வைத்தார். யூஜிசி விதிகள், துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இம்மசோதா குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் மிஷா ரோஹ்தகி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Facebook Comments Box