கடலூர் உட்பட நான்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை (அக்.6) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

வடகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் நாளை முதல் (அக்.6–11) தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதில், நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்,

8-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை மலைப்பகுதிகள், திருச்சி, சேலம், தருமபுரி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

9-ம் தேதி கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் குமரிக்கடல் பகுதிகளில் நாளை மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை பதிவுகளின்படி,

மதுரை மாவட்டம் எழுமலை – 13 செ.மீ, கிருஷ்ணகிரி – 12 செ.மீ, நாமக்கல் – 11 செ.மீ, சேலம் எடப்பாடி – 10 செ.மீ,

சங்கரி துர்க்கம் – 7 செ.மீ, கருப்பாநதி அணை (தென்காசி) – 6 செ.மீ,

ஏத்தாப்பூர் (சேலம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), தோகைமலை (கரூர்), பேரையூர் (மதுரை), அம்மாபேட்டை (ஈரோடு) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box