புதுச்சேரியில் நாளை முதல் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்படவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்த இயக்கம், மாநிலத்தில் ஐந்தாவது முறையாக திராவிட மாடல் ஆட்சியை அமைக்கும் நோக்குடன் நடைபெறுகிறது.
புதுவை மாநில திமுக அமைப்பாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:
“பாஜக கூட்டணி ஆட்சியிலிருந்து புதுச்சேரியை மீட்டு, மண்–மொழி–மானத்தை காக்கும் பணிக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்ற பரப்புரையை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, பாஜக கூட்டணி அரசின் தோல்விகளை விளக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தது 30% புதிய உறுப்பினர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் மற்றும் எம்.பி. ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட உள்ளது.
பின்னர் முத்தியால்பேட்டை தொகுதியில் “உடன்பிறப்பே வா” இயக்கத்தை தொடங்கி வைத்து, வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து உப்பளம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இயக்கம் விரிவடைகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கிய ஆணைப்படி, 2026-ஆம் ஆண்டு புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைக்க இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம் முன்னெடுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.