“முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்!” — அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தும், அவற்றை கவனிக்காமல் அக்டோபர் 12ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணராமல் வாரியம் பிடிவாதமாக நடப்பது கண்டிக்கத்தக்கது.

தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. புதிய பாடத்திட்ட மாற்றங்களால், தேர்வுக்கான தயாரிப்பிற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், அக்டோபர் 12ஆம் தேதியிலான தேர்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இருந்தும், வாரியம் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கும் தேர்வுகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறுவதில்லை. உதாரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மற்றும் மாநிலத் தகுதித் தேர்வுகள் பல மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டன. மேலும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஓராண்டுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டே உள்ளது. எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

அதனால், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும், விடைத்தாள்களில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, தேர்வர்கள் பயன்படுத்திய OMR விடைத்தாள்களின் நகல்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் நடைபெற்றது போல CBT (Computer Based Test) முறையில் இத்தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box