சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அவர் படுகொலை செய்யப்பட்டால், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? என்றும் விமர்சித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் முன்பு நின்று சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் பல இடங்களில் வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிவாளுடன் தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சென்னை பெரம்பூர் பகுதியில் குஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் @BSPArmstrong மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் ஸ்ரீமதி. @Mayawati , @bspindia தொண்டர்களுக்கும் மற்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்த திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டால், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக விமர்சித்து என்ன பயன்? குற்றவாளிகளுக்கு கொல்லும் தைரியம் எப்படி வந்தது? காவல்துறை, அரசு, சட்டம் என்றெல்லாம் அஞ்சாமல் குற்றங்கள் நடக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை நிலைகுலையச் செய்துள்ள திமுக.வினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தவும், அன்னாருக்கு அமைதியான முறையில் அடக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் @mkstalin ஐ கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.