“எங்களைப் போன்ற கட்சிகள் எல்லாம் மக்கள் இடத்துக்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்” – நடைபயண அனுமதி மறுப்பால் அன்புமணி அதிருப்தி
“மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதான் ஆளுங்கட்சியின் ஊழல்களை சொல்ல முடியும்” என்று நடைபயண அனுமதி மறுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறை அனுமதி மறுத்ததால், அன்புமணி அப்போது ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:
“மதுரை, நெல்லை, கன்னியாகுமரியில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் உள்ளன. இதற்காக வந்தேன். எனது நடைபயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை; ஆனால் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தக் கூடாது; தனியார் இடங்களில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது. எங்களைப் போன்ற கட்சிகள் மக்கள் இருக்கும் இடத்துக்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆளும் கட்சி செய்த ஊழல்கள் பற்றி மக்கள் முன் சொல்ல முடியும்.”
அன்புமணி தொடர்ந்து கூறியது:
“கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உணவளிக்கும் கடவுளாக இருக்கும் விவசாயிகள் உயிரை இழக்கின்றனர் என்பது மிகப்பெரிய துயரம். ஒரு விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது.
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்தும் உரிமை கர்நாடகா அரசுக்கு உள்ளது என்று நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம். இதற்குப் பிறகும் தமிழக முதல்வர் மவுனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது 100% பொய். இது சாதிப் பிரச்சினை அல்ல; சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை அடையாளம் காணும் முயற்சி. சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.”
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நிலை குறித்து அன்புமணி கூறியது:
“அவர் அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய நிலைதான் உள்ளது. ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதால் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் நேரில் வந்து சந்தித்தது நல்லது.”