தஷ்வந்த் விடுதலை: குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் கருப்பு நாள் — அன்புமணி

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் அவர் கூறியதாவது, “சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் நாம் வலிமையற்றதாக இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டு.”

வழக்கின் விவரம்: வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன், தடயங்களை அழிக்க சிறுமியின் உடலையும் எரித்தார். தஷ்வந்த் மென்பொருள் பொறியாளராக இருந்தார். சில மாதங்களில் தமது தாயையும் கொலை செய்து தப்பி ஓடிய அவர் பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்டார். குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தஷ்வந்தை விடுதலை செய்துள்ளது.

விடுதலை காரணமாக காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், “இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. இதனால் வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது. குழந்தைகள் வாழும் தெய்வங்கள்; அவர்களை பாதுகாப்பது நமது கடமை. தண்டனை வழங்க முடியாததால் நமது சட்ட செயலாக்கம், வழக்கு நடத்தும் அமைப்பு பலவீனமானதாக இருக்கிறது. இதற்காக அரசு மற்றும் காவல்துறை தலைகுனிய வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

Facebook Comments Box