தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ம் தேதி தொடங்கும்: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இன்று, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை 16 முதல் 18-ம் தேதிகளில் தாமதமாக வரக்கூடும் சாத்தியங்கள் உள்ளன. அதேவேளை, வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைக் காற்று வீசுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 16-18-ம் தேதிகளில் வடகிழக்கு மழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

வடதமிழக கடலோரத்தில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளது. அதேபோல், வடக்கு ஆந்திரா மற்றும் அதற்கிடையிலான பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளது. இதனால் இன்று (அக்.11) பெரும்பாலான இடங்களிலும், 12-16-ம் தேதிகளில் சில இடங்களில் இடி-மின்னல் மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றைய நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை அதிகரிக்கும். கோவை மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (அக்.12) கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதற்கிடையிலான குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில், இடை இடையே 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லக் கூடாது.

Facebook Comments Box