பீகார் மாநிலத்தின் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் பூர்வோதயா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குறிப்பாக பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாரின் கயாவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும் என்றும் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பீகாரின் கயாவில் தொழில் வளர்ச்சி மற்றும் சாலை இணைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, பாட்னா-பூர்னியா விரைவுச்சாலை, பக்சர்-பகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா-ராஜ்கிர்-வைஷாலி-தர்பங்கா சாலை மற்றும் பக்சரில் கங்கை நதியின் மீது கூடுதல் இருவழிப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும்.