பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வக்கிரமான நோக்கத்துடன் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைக் கண்டித்தும், பெண்களை அதிகாரமற்றவர்கள், தகுதியற்றவர்கள், அறிவற்றவர்கள் என்று எண்ணும் மனப்பான்மையைக் கைவிட ஒட்டுமொத்த தேசமும் ஒன்று திரள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் அச்ச உணர்வில் இருந்து விடுபட்டு, விடுதலைப் பாதையில் முன்னேறுவதில் உள்ள தடைகளை அகற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறிய தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலையைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என்றும், அதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க தேசத்தைக் கேட்டுக் கொண்டார்.