800 ஆண்டு பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு: வரலாற்றுக்கு புதிய வரவு என ஆய்வாளர்கள் பெருமிதம்

0

மதுரை அருகே 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கிராம மக்கள் மூலம் கண்டுபிடிப்பு – தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பு

மதுரை மாவட்டத்தின் மேலூர் வட்டத்தில் உள்ள மலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உடன்பட்டி என்ற சிற்றூரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருந்த ஓர் பழமையான சிவன் கோயில் சமீபத்தில் கிராமவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் வரலாற்றில் புதிய பதிவாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோயிலானது “ஓட்டக்கோயில்” என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் கீழ் பகுதியில் பல தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில், இப்பகுதியின் பழைய பெயர் “ஆற்றூர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவன் கோயிலின் மூலவர் “தென்னவனீசுவரம்” என அழைக்கப்பட்டுள்ளார். இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை. இவை கி.பி. 1217–1218-ல் சமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கல்வெட்டின்படி, “அழகப்பெருமாள்” எனும் தலைவன், நாகன்குடி என்ற ஊரின் குளத்தையும் அதனைச் சூழ்ந்த விவசாய நிலங்களையும் “ஆற்றூர் நம்பி பேரம்பலக் கூத்தன்” எனும் தலைவருக்கு 64 காசுகளுக்கு விற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலங்களின் வருமானம், சிவன் கோயிலின் நாளாந்த செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு கல்வெட்டில் “திருநோக்கு அழகியான்” என்பவர் தனது பெயரில் விநாயகரையும், மற்ற பரிவார தெய்வங்களையும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இவை, இந்தக் கோயில் 800 ஆண்டுகளுக்கு மேலான பழமையை கொண்டது என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.

கோயில் அமைப்பு மற்றும் சிற்பங்கள்:

இக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் நுழைவாயில் ஆகியவை அமைந்துள்ளன. கோயில் பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் அம்மன் இருந்துள்ளனர். தட்சிணாமூர்த்தியின் சிலை மண்மூடியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அம்மன் சிலை, முந்தைய வெள்ளப்பெருக்கில் முல்லையாற்றில் அடித்துச் சென்ற நிலையில், தற்போது ஆற்றின் மறுகரையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் வடிவமைப்பைத் தழுவி, இது சிகரம் மற்றும் கலசம் இல்லாத பாண்டியக் கட்டிடக்கலைக்கு சொந்தமானது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்குழுவில் பங்கேற்றோர்:

இந்த ஆய்வில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி மற்றும் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் இணைந்து இந்த முக்கியமான வரலாற்று ஆதாரத்தை வெளிக்கொணர உதவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here