காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கண்டனம்

0

திமுக ஆட்சியில் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை வி.சத்திரப்பட்டி சம்பவம் நிரூபிக்கிறது. அப்படியிருக்க, பொதுமக்களை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்? என்பது பெரிய கேள்வி,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமானது. ஒரு காவல் நிலையமே இந்த அளவுக்கு பாதுகாப்பற்று இருந்தால், மக்கள் நிலை என்னவாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துக்குப் பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட முயன்றபோது காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்கள் மட்டுமல்ல, பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகவேதனையான விஷயம். காவல் நிலையங்கள் தாக்கப்படுவது ஸ்டாலின் ஆட்சியின் முக்கிய சாதனையாகப் பதிவு செய்யப்படலாம்,” என்று ஏப்பிஎஸ் கேலி செய்துள்ளார்.

“வெட்கமில்லையா முதல்வரே? உங்கள் கீழுள்ள காவல் நிலையமே பாதுகாப்பற்று உள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி மக்களை எப்படி காப்பாற்றும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நான் பலமுறை கூறியதுபோல், இச்சமயத்திலும் ஒருமுறை மீண்டும் சொல்ல விரும்புகிறேன் – இந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி முடியும் வரை, தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களே தங்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here