பாஜகவுடனான கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென அதிமுக நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுரை!
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அதிமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கடந்த காலங்களில் கூறி வந்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இரு கட்சிகளும் கூட்டணிக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேசமயம், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், அது ஆட்சியுக்கும் வரும் என்றும் இரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இந்த சூழலில், சமூக வலைதளங்களில் சில அதிமுகவினர் கூட்டணியை விமர்சிக்கும் வகையில் கருத்துகள் தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாஜகவுடனான கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென, பொதுவெளியில் விமர்சனங்கள் வெளியிட வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கும்போது,
“பொதுச்செயலாளர் ஏற்கனவே, ஊடகங்களில் கூட்டணி தொடர்பாக யாரும் பேசக் கூடாது என அறிவுறுத்தியிருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி கூட தற்போது வருவதில்லை. கீழ்மட்டத்தில் சிலர் பேசும் கருத்துகள் பொதுச்செயலாளருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் யாரும் பேசக் கூடாது. தேவையான பதில்களை பொதுச்செயலாளர் வழங்குவார். மற்றவர்கள் ஊடகங்களில் கருத்து கூற வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.