“கேலிச்சித்திரங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பும் திமுகவுக்கு, 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் உரிய பதிலை தருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியைப்பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது, “முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் இந்த விவகாரத்தில் தெளிவாக விளக்கம் வழங்கியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும், அதனைத் தொடர்ந்து அதிமுக அரசு கீழடி அகழாய்வில் எவ்வாறு பங்களித்தது என்ற எல்லா விவரங்களும் முன்வைக்கப்பட்டுவிட்டன” எனத் தெரிவித்தார்.
மேலும், “ஒவ்வொரு அமைப்பினரும் தாங்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஒரு ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில், மதுரையில் முருக பக்தி மாநாடு நடைபெறுவது இயல்பானதே” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலம் பேசுபவர்களைப் பற்றி கூறிய கருத்துக்களைப் பற்றி பேசும் போதே, “தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதைக் குறை கூறும் வகையில்தான் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்” என விளக்கினார்.
திமுக ஆட்சியின்போது மக்களிடையே அதிக எதிர்ப்பு நிலவி வருவதாகவும், மக்கள் விரோதமாக இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “இந்த ஆட்சியின் தோல்விகளை மறைக்கவும், மக்கள் கவனத்தை வேறு திசையாக்கவும், திமுக அவதூறு மற்றும் கேலிச்சித்திரங்களை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் 2026 தேர்தலில் இதற்கான சரியான பதிலை மக்கள் அளிப்பார்கள்” எனக் கூறினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செ.ம. வேலுசாமி மற்றும் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர். ஜெயராம், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோரும் இருந்தனர்.