எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரம் தொடர்பாக திமுகவைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0

எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரம் தொடர்பாக திமுகவைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை சாடி, கார்டூன் வெளியிட்டதற்காக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை எதிர்த்து, சமூக வலைதள பக்கங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றும், திமுக அரசை குறைந்தது ஆறு மாதங்களுக்கு தேர்தல் ஆணையம் இடைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், அம்மா பேரவை மாநில செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அதிமுகவினர் பலர் பங்கேற்று, திமுகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், அன்பழகன் தனது உரையில் கூறியதாவது:

”வெறும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சி அமைத்த திமுக அரசு, தற்போதுள்ள அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. அரசுத் திட்டங்கள் நிறைவேறாமல் போனதோடு, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்குலைவு மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய நிலையில், எங்களது பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக அரசின் தவறுகளை ஆதாரங்களுடன் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். அவரை எதிர்கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின், கார்டூன் வழியாக விமர்சிக்க கட்சியினரை நியமித்து, அர்த்தமற்ற அரசியல் நடத்துகிறார். இது ஜனநாயக ஒழுக்கத்தை மீறுகிறது.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியதும், ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமரிடம் கெஞ்சியதாகும். பின்னர் அந்த விசயத்தை மறந்து, எங்களது தலைவரை தரம் தாழ்த்தி சித்தரிப்பது முற்றிலும் தவறானது. திமுகவை விமர்சிப்பவர்களை காவல்துறையின் மூலம் அடக்க முயற்சிக்கும் திமுகதான், மற்ற கட்சிகளை அவதூறாக சித்தரிப்பது எவ்வாறு நியாயமானது?” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here