20 ஆண்டுகள் சேவையாற்றிய காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி வழங்கப்பட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

0

“20 ஆண்டுகள் சேவையாற்றிய காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி வழங்கப்பட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட வாக்குறுதியில், 20 ஆண்டுகள் சேவை செய்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாத திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

தனது அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது:

“தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் 10+5+10 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக பதவி உயர்வு வழங்கும் நடைமுறை நீண்ட காலமாக நிலவுகிறது. இதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின் முதல் நிலைக் காவலராக, மேலும் 5 ஆண்டுகளுக்கு பின் தலைமைக் காவலராகவும், பின்னர் 10 ஆண்டுகள் கழித்து சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெறுவது வழக்கம்.

ஆனால், தற்போது திமுக அரசு இந்த நடைமுறையை மாற்றி, 13 ஜூன் 2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில், 10 ஆண்டுகள் இரண்டாம் நிலைக் காவலராகவும், 3 ஆண்டுகள் முதல் நிலைக் காவலராகவும், 10 ஆண்டுகள் தலைமைக் காவலராகவும் பணியாற்றிய பிறகு – மொத்தமாக 23 ஆண்டுகளுக்குப் பிறகு – சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி அளிக்கப்படும் என புதிய ஆணையை பிறப்பித்துள்ளது. இதில், முதல்நிலை காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய விதியை 3 ஆண்டுகளாகக் குறைத்துள்ளனர்.

‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற திமுக வாக்குமூலத்துக்கு மாறாக, நடைமுறை நடவடிக்கைகள் விரோதமாக உள்ளன. வாக்குறுதி ஒன்று, செயல் வேறென்று செயல்படுவது ஸ்டாலின் தலைமையிலான அரசின் வழக்கம் ஆகிவிட்டது. தேர்தல் அறிக்கையின் எண் 389-இல் வழங்கப்பட்ட வாக்குறுதியை அலட்சியமாக கைவிட்டுள்ளது திமுக அரசு.

இந்த புதிய உத்தரவு 2001-2005 காலப்பகுதியில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்கு பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நடைமுறையில் குழப்பங்களை உருவாக்கும் என்றும் காவலர்கள் கூறுகின்றனர். காவல்துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் பணிசெய்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஸ்டாலின் அரசின் தவறான முடிவுகளை திருத்தும் நோக்கத்தில், இந்த வலியுறுத்தலை முன்வைக்கிறேன்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here