மருத்துவமனைகள் திறக்கும் போதே போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

0

மருத்துவமனைகள் திறக்கும் போதே போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும்போது, அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திமுக அரசு அரசு மருத்துவமனைகளுக்காக கட்டடங்களை எழுப்புகிறது. ஆனால், அங்கு புதிதாக மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பிற உதவி பணியாளர்கள் நியமிக்கப்படுவது இல்லை.

வேலூர் மாநகரத்தில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை, ரூ.150 கோடி செலவில் பல்துறை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார். எனினும், புதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இது மட்டுமல்லாமல், சேலம், திருநெல்வேலி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் புதிதாக மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல், திமுக அரசு அவர்களை புறக்கணித்து வருகிறது.

மக்கள் தொகையை பொருத்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மருத்துவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசு அதை அலட்சியமாகவே நடத்தி வருகிறது. மேலும், போராடும் மருத்துவர்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்கிறார்கள்.

எனவே, புதிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும் போதே தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here