துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகியவை முக்கிய கட்சிகள். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் களம் இறங்கியுள்ளார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு தாக்குதலில் டொனால்ட் டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்பை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த செய்திக்காக காத்திருக்கும் வேளையில் அவருக்காக பிரார்த்திக்கிறேன். குடும்பம் மற்றும் பேரணியில் உள்ள அனைவரும்.”
அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக ஜில் பிடனும் நானும் இரகசிய சேவைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை. அதைக் கண்டிக்க நாம் ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டும்” என்று ஜோ பிடன் ட்வீட் செய்துள்ளார்.
பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.