அரக்கோணத்தில் CISF வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான கடலோரப் பகுதியையும், வளமான இந்தியாவையும் உருவாக்கும் நோக்கில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை 7 ஆம் தேதி சைக்கிள் பேரணியை நடத்தும். இது தொடர்பாக, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஐஜி சரவணன் மற்றும் டிஐஜி பொன்னி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஐஜி சரவணன், 14 பெண்கள் உட்பட 125 CISF வீரர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்பார்கள் என்றும், அணிவகுத்துச் செல்லும் வீரர்கள் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும் கூறினார்.
மொத்தம் 6,553 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரக்கோணத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்றும், சைக்கிள் பேரணி இறுதியாக கன்னியாகுமரியை அடையும் போது வீரர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.