WhatsApp Channel
“இஸ்ரோவில், தோல்விக்கு எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படுவதில்லை. இது நமது விஞ்ஞானிகளை முடிவெடுப்பதில் புதிய அணுகுமுறைகளை எடுக்க ஊக்குவிக்கிறது,” என்று அதன் தலைவர் சோம்நாத் புதன்கிழமை பெருமையுடன் கூறினார்.
‘சந்திராயன்-3’ வெற்றியின் மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதன்பின், சூரியனின் வெளிப் பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ‘ஆதித்யா-எல்1’ விண்கலம், இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மேலும், பல வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி திட்டங்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
இந்நிலையில், அகில இந்திய மேலாண்மை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். விவாதத்தில் அவர் கூறியதாவது: நானும் எனது பயணத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளேன். ஆனால், எனது மேலதிகாரிகளால் என்னை விசாரிக்கவே இல்லை.
இஸ்ரோவின் தோல்விகளுக்காக எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படுவதில்லை என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஏனெனில் எந்த ஒரு முடிவும் தனி மனிதனால் எடுக்கப்படுவதில்லை.
கூட்டு முடிவெடுக்கும் தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகம் முதலில் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு எந்த ஒரு நபரும் பொறுப்பேற்க கூடாது.
இது விஞ்ஞானிகளுக்கு புதுமையான அணுகுமுறைகள் அல்லது முடிவுகளை எடுக்க தைரியத்தை அளிக்கிறது. இல்லையெனில், புதிய முயற்சி எதுவும் எடுக்காமல் அனைவரும் வெளியேறி விடுவார்கள்.
தோல்விகள் என்பது விண்வெளித் தொழில் பணியின் இயல்பான பகுதியாகும். தாமதத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து தேவையான திருத்தங்களைச் செய்வதே சிறந்த அணுகுமுறை என்பதை இஸ்ரோ நிர்வாகம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குவது எந்த நிறுவனத்திலும் அதிசயங்களைச் செய்ய முடியும்.
கிராமவாசிகளின் அர்ப்பணிப்பு: நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடுகையில், கிராமங்களில் உள்ள ஏழைப் பின்னணியில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதைக் கண்டேன்.
3ம் நிலை கல்வி நிறுவனத்தில் படித்த ஒருவர் இஸ்ரோவில் பணியமர்த்தப்பட்டால், அந்த நபரின் திறன் மற்றும் அறிவு வளர்ச்சி விகிதம் நகரவாசியை விட சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் கிராமவாசிகளை விட நகரவாசிகளுக்கு கவனச்சிதறல்கள் அதிகம். இஸ்ரோவில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இதுதான்,” என்றார்.
Discussion about this post