WhatsApp Channel
ஆபரேஷன் அஜய்யின் கீழ் 274 இந்தியர்களுடன் 4வது விமானம் இன்று இஸ்ரேலில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.
காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த 7ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலிய அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்கி ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த மோதலில், இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் சுமார் 20,000 இந்தியர்கள் உள்ளனர். போருக்குப் பிறகு, அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்கிறார்கள்.
போர் பதட்டங்களுக்கு மத்தியில், அனைத்து நாடுகளும் இஸ்ரேலில் இருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன்படி, குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக டெல் அவிவ் விமான நிலையத்தில் குடிமக்கள் உதவி மையங்களை அமைத்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் அஜய்யின் கீழ் இந்தியர்கள் தனி விமானங்களில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த விமானம் 212 இந்தியர்களைக் கொண்ட முதல் குழுவுடன் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்தது.
இதையடுத்து, டெல் அவிவில் இருந்து 235 இந்தியர்களுடன் 2வது சிறப்பு விமானம் இந்தியா வந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4வது விமானம் இன்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார்.
இஸ்ரேலில் இருந்து திரும்பிய இந்தியர் ஒருவர் கூறுகையில், டெல் அவிவில் நிலைமை சீராக உள்ளது. ஆனால் தெற்கு மற்றும் வடக்கு இஸ்ரேலில் போருக்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் நாங்கள் திரும்பி வந்தோம். அரசு நல்ல பணியை செய்துள்ளது. 2 மற்றும் 3 நாட்களில் வேகமாக செயல்படும் என்றார்.
Discussion about this post