WhatsApp Channel
மோர் நகரில் உள்ள கமாண்டோ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசினர்.
மணிப்பூரில் பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நடந்து வரும் மோதல் மே 3 அன்று பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து அகதிகள் போல் முகாம்களில் வாடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை மணிப்பூரில் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மோரே நகரில் மாநில கமாண்டோ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். அப்போது மர்மநபர்கள் சிலர் கமாண்டோ படையினரின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். ஒரு கமாண்டோ வீரர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மோர் நகரில் உள்ள கமாண்டோ படைகளின் முகாம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். முகாம்களுக்குள் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கமாண்டோ படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதில் 6 பயங்கரவாதிகள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமாண்டோ படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post