WhatsApp Channel
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
2020ல் மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர். ஓராண்டு கால போராட்டத்தின் முடிவில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்றக் கோரி அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை ஏற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகளில் முக்கியமானது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம். நிச்சயமற்ற சந்தை நிலைமைகளை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு தேவை ஒரு உயிர்நாடி.
இதேபோல், மின்சாரச் சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும், லக்கிம்பூர் கேரியில் நடந்த போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்தது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சட்ட உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்க குழு அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு அந்தக் குழு மீது நம்பிக்கை இல்லை. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலக வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் பேரணியை தொடங்கியதையடுத்து டெல்லியின் எல்லைகளை போலீசார் சீல் வைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தடையை மீறி டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Discussion about this post