WhatsApp Channel
மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக் கூடாது, சேவை செய்வதே என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் 107வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இன்று மருத்துவ விஞ்ஞானம் வெறும் சிகிச்சையுடன் நின்றுவிடவில்லை. அதன் தன்மை வெகுவாக விரிவடைந்தது. நான்காவது தொழில் புரட்சியின் காரணமாக இயற்பியல், டிஜிட்டல் மற்றும் உயிரியல் துறைகளுக்கு இடையே உள்ள இடைவெளி சுருங்கி வருகிறது.
புதிய சோதனைகள் மற்றும் மரபணு நுட்பங்கள் பல நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றன. ஆனால் இந்தத் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
மக்கள் மருத்துவர்களை கடவுளாக கருதுகின்றனர். இந்த தார்மீகப் பொறுப்பை மருத்துவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒரு உண்மையான வெற்றிகரமான மருத்துவர் அல்லது செவிலியர் தொழில்முறை மற்றும் இரக்கத்தின் மதிப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே உண்மையிலேயே வெற்றிபெற முடியும்.
ஒரு நல்ல ஆரோக்கிய நிபுணராக இருக்க நல்ல மனிதனாக இருப்பதும் முக்கியம். பண்பு இல்லாத அறிவும், மனிதநேயம் இல்லாத அறிவியலும் பாவம் என மகாத்மா காந்தி கூறியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இல்லாமல், சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நார்வே அரசுடன் இணைந்து தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் நிறுவியிருப்பது சிறப்பானது. தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் இந்த மையம் உதவும் என்றார்.
Discussion about this post