WhatsApp Channel
நம் நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பா.ஜ., வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்துள்ளது என்பது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வேட்பாளர்களை தேர்வு செய்ய பாஜக இன்னும் விரிவான செயல்முறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனை: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று இரவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். முதல்கட்டமாக சுமார் 100 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.
வேட்பாளர் தேர்வு: இந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பாஜக பின்பற்றும் செயல்முறையைப் பார்ப்போம். முதலாவதாக, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொதுமக்களிடமிருந்து பாஜக கருத்துகளைப் பெற்றது. நமோ செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு மிக்க 3 பேரை தேர்வு செய்து அவர்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் மக்களுடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதே நடைமுறை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக தனது எம்.பி.க்களின் செயல்பாடுகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன், ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய, தனியார் நிறுவனத்தின் உதவியையும் பா.ஜ., நாடியுள்ளது. அவர்களது அறிக்கையும் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
தீவிர ஆய்வு: இதற்காக அமைச்சர்களும் நேரடியாக களம் இறங்கி லோக்சபா தொகுதிகளை பார்வையிட்டு எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளித்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, மாநில அளவிலான தேர்தல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிட்டி தான் இறுதி முடிவு எடுக்கும். அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு டெல்லி தலைமையகத்திற்கு அனுப்புவார்கள். நட்டா, அமித் ஷா பிஎல் சந்தோஷ் போன்ற முன்னணி தலைவர்கள் பட்டியலை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுப்பார்கள்.
மோசமாக செயல்பட்ட எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 60-70 எம்.பி.க்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு சீட் வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பல எம்பிக்கள் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 பொதுத்தேர்தலில் பாஜக சார்பில் 85 ஓபிஎஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பாஜக அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post