பாகிஸ்தானைச் சுற்றியுள்ள போர் பதற்றம் – இந்தியாவின் பலதரப்பட்ட பதிலடி நடவடிக்கைகள்

0

பாகிஸ்தானைச் சுற்றியுள்ள போர் பதற்றம் – இந்தியாவின் பலதரப்பட்ட பதிலடி நடவடிக்கைகள்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த 22ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல், பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டது என்று இந்தியா உறுதி செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே கடுமையான பதற்றம் நிலவுகிறது.

இந்திய அரசு உடனடியாக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் நிறுத்தப்பட்டன; நாட்டில் உள்ள பாகிஸ்தானியரை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அட்டாரி எல்லைச் சாவடி மூடப்பட்டது; சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தான் இறக்குமதிகள், அஞ்சல் சேவைகள் ஆகியவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மேலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி ஆதரவைத் தடுக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை வளர்க்கும் நாட்டாக பாகிஸ்தானை FATF கறுப்புப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகிறது.

இந்திய பக்கத்தில் ராணுவ தயார்வுகள் தீவிரமாகின்றன. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சகம், முப்படைத் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, எந்தவொரு பதிலடிக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளார். இந்தியக் கடற்படை, அரேபியக் கடலில் INS சூரத் உள்ளிட்ட போர்க்கப்பல்களுடன் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத்துக்கரையிலுள்ள கடற்படை தயார்வுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தானின் வான்வெளியை மூடி, பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களையும் தடை செய்துள்ளது. பாதுகாப்புத் துறையில், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் முழுமையாக இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 7000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் இராணுவம் தொடர்ச்சியாக எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. ஆனால், இந்திய இராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தயார்நிலை மோசமான நிலையில் உள்ளது. உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததால், கையிருப்பு குறைந்துள்ளது. வெடிமருந்து உற்பத்தி இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியா எப்போது, எங்கு, எப்படி தாக்குதல் நடத்தும் என்பது இரகசியமாக வைத்திருப்பது முக்கியக் கவனம் பெற்ற விஷயமாக இருக்கிறது. ஆனால், இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here