‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயின் நாட்டில், திமுக எம்.பி. கனிமொழி தகுந்த பதிலை வழங்கியுள்ளார். தற்போது அவரது பதில் கவனத்தை பெற்றுள்ளது.
எல்லையை கடந்து நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை மையமாக கொண்டு, அதற்கான ஆதாரங்களை உலக நாடுகளுக்கு விளக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 10 நாட்களுக்கு பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தக் குழுவின் ஒரு பகுதியாக, கனிமொழி தலைமையில் இருக்கும் குழு ஐரோப்பாவில் பயணிக்கிறது. அவர்களின் பயணம் ரஷ்யாவில் தொடங்கியது. தற்போது அவர்கள் ஸ்பெயின் சென்றடைந்துள்ளனர். அங்குள்ள நிகழ்வில், கனிமொழியிடம் “இந்தியாவின் தேசிய மொழி என்ன?” என்று கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கனிமொழி,
“இந்தியாவின் தேசிய மொழி வேறுபாட்டில் உள்ள ஒற்றுமையே. இந்த குழு உலகம் அறிய வேண்டிய செய்தி இதுதான். இது தான் இன்றைய நாளில் மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். போர் தேவையற்றது. நாட்டுக்குள் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் அவற்றிலிருந்து திசைதிருப்பப்படுகிறோம்.
காஷ்மீர் மற்றும் இந்தியா பாதுகாப்பான பகுதிகளாக இருக்க உறுதி செய்யப்படும். அவர்களது முயற்சிகள் எங்களை பாதிக்காது. இந்தியா அமைதியை விரும்புகிறது. நாங்கள் அகிம்சையின் வழியில்தான் விடுதலையை பெற்றோம்” என்று கூறினார்.
மாட்ரிட் நகரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கனிமொழி இவ்வாறு பேசினார். இந்த குழுவில் பாஜக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.