ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித்துகளுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். 52 வயதான இவர், சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை திடீரென அரிவாளால் வெட்டினர்.
பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித்துகளுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.