நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல்

0

நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. 7 கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தது.

அதைத் தொடர்ந்து புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி துவங்கி, ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு கடந்த 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதன்படி நாளை (திங்கட்கிழமை) பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.

நடப்பு நிதியாண்டிற்கான (2024-2025) மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடியின் 3வது பதவிக்காலத்தின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும், பெரிய அளவிலான சமூக, பொருளாதார முடிவுகள் உள்ளடக்கப்படும் என்றும் குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்டது. இதனால், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து, நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here