உலகப் பொருளாதாரம் சரியில்லாத சூழலில் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதமாக குறைந்த அளவிலேயே நிலைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் கல்வி, திறன் மேம்பாடு, சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இபிஎப்-ன் கீழ் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்
அதுமட்டுமின்றி தொழில் துறையினருடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு விடுதிகள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.