கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 238 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று சூரல்மலை, முண்டகை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் 3 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் இந்திய ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு அனுப்பிய மீட்புக் குழுவினர் வயநாடு வந்தனர். இந்த குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.