பதஞ்சலிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு…

0

பதஞ்சலிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பொய்யான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது. சட்டத்தை மீறி செயல்பட மாட்டோம் என பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் உறுதி அளித்தார். அதன் பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

பாபா ராம்தேவ் தவறான விளம்பரத்திற்கு மன்னிப்பு கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிகைகளில் பாபா ராம்தேவ் மன்னிப்புக் கோரும் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி நிறுவனம் பொய்யான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தது. பதஞ்சலி அறக்கட்டளையின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குக்காக பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here