தனி விமானத்தில் டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
1992 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் இந்தியா தூதரக உறவுகளைப் பேணி வருகிறது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 2½ ஆண்டுகால போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.
இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து, இரு நாட்டு தலைவர்களிடமும் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெலென்ஸ்கி, உக்ரைன் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி போலந்து மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் மோடி சென்றார். இதற்காக கடந்த 22ம் தேதி போலந்து சென்ற அவர் அங்கு 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பின், ரயிலில் உக்ரைன் சென்றார். அங்கு உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா உதவும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். தனி விமானத்தில் டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.