காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார்.
இதன்பின், உமர் அப்துல்லா தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனிடையே டெல்லி சென்ற முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.