பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சமமான கல்வி வழங்குவதே மும்மொழிக் கொள்கையின் நோக்கம்”
திருச்சியின் மன்னார்புரம் பகுதியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாஜகவின் மூத்த தலைவர்கள் ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கையெழுத்து இயக்கத்துக்கு அமோக வரவேற்பு!
விழா மேடையில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜகவின் கையெழுத்து இயக்கத்துக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “18 நாட்களில் 26 லட்சம் பேர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். 8-வது மண்டல மாநாடு முடிவடையும் போது, இந்த எண்ணிக்கை 2 கோடியை எட்டும்” என உறுதியாக கூறினார்.
புதிய கல்விக் கொள்கை – தரமான கல்விக்கான தீர்வு
“அரசுப் பள்ளி மாணவர்களும் தரமான கல்வி பெற வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம். இதன் மூலம் கல்வித் தரம் உயர்ந்து, அனைவருக்கும் சமத்துவமான கல்வி வாய்ப்பு கிடைக்கும்” என்று அவர் கூறினார்.