தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசின் மதுக் கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் முடிந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி – பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியினரை கவர பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சதர்பூர் எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார், டெல்லி முன்னாள் அமைச்சரும், படேல் நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜ்குமார் ஆனந்த், படேல் நகர் தொகுதியின் மற்றொரு முன்னாள் எம்எல்ஏ வீணா ஆனந்த் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
தமிழக ஆம் ஆத்மி கட்சியினர்: இன்று தமிழகத்திலும் தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் தலைவர் தமிழ் நெஞ்சம் தலைமையில் சுமார் 40 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
பா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி: தமிழக ஆம் ஆத்மி பிற்படுத்தப்பட்ட அணி மாநில செயலாளர் சரவணன், வடசென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
அண்ணாமலை வரவேற்பு: இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இன்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் பிற பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் தலைமையில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆளுமை மற்றும் தலைமைத்துவமும் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார்.
அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வலுவான பாரதம் மற்றும் வளர்ந்த தமிழ்நாடு என்ற நமது இலக்கை நோக்கி அயராது உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.