பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி ஆட்டு சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி, வியாபாரிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறும் என்பது வழக்கம்.
இந்த வார சந்தைக்கு வாணியம்பாடி மட்டுமல்லாது, மாவட்டத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் தங்கள் ஆடுகளை சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிகமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், “வாரந்தோறும் நடைபெறும் இந்த சந்தையில் குறைந்தது 800 ஆடுகள் விற்பனையாகி, சுமார் ரூ.2 கோடி வர்த்தகம் நடைபெறும். ஆனால் இந்த வாரம், பக்ரீத் பண்டிகை வரவுள்ளதால், 1,800 ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால், ஆடுகளுக்கு அதிக தேவை இருப்பது தெரிந்ததால் வியாபாரிகள் அதிகமாக ஆடுகளை எடுத்துக்கொண்டு வந்தனர்,” என்றனர்.
ஆடுகளின் விலை சிறிய வகைக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை, நடுத்தர வகைக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை, பெரிய வகைக்கு ரூ.10,000 மற்றும் அதற்கு மேலாக இருந்தது.
அந்த நாள் காலை 6 மணிக்கு தொடங்கிய சந்தையில், அதிக விற்பனை காரணமாக நண்பகல் 12 மணிக்குள்ளாகவே பெரும்பாலான ஆடுகள் விற்பனையானது. ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறியுள்ளது வியாபாரிகளில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.