சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.50 கோடி மானியம் பெறலாம் – தொழில்முனைவோர் பயன்பெற வேண்டிய தகவல்கள் வெளியீடு
சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடி வரையிலான அரசின் நிதி உதவியை (மானியம்) பெறும் வாய்ப்பு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜவுளித் துறை பல்வேறு பிரிவுகளில் சிறந்த வளர்ச்சியுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், 2022-ஆம் ஆண்டு துணிநூல் துறை உருவாக்கப்பட்டு, பல பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழக அரசு சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 2 ஏக்கர் நிலத்தில், மூன்று தொழில்முனைவோர்களால், மூன்று தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். திட்டத்தின் மொத்த மதிப்பீட்டின் 50 சதவிகிதம் அல்லது ரூ.2.50 கோடி – இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அதனை மானியமாக அரசு வழங்குகிறது.
தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் திட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைக்கான கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை மானியத்திற்குத் தகுதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மானியத் தொகை, பணிகள் முன்னேறும் வகையில் மூன்று கட்டமாக வழங்கப்படும்.
திருப்பூர், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 19 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்பாலைகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தமிழக அரசு ஒரு சிறப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் பழைய இயந்திரங்களை மாற்றி, புதிய இயந்திரங்களை வாங்குவதற்காக பெறப்படும் வங்கிக்கடனுக்கான வட்டிக்கு, 5 ஆண்டுகள் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த நன்மைகளைப் பெற, 2024 டிசம்பர் 9-ம் தேதிக்குப் பின் வங்கிக்கடன் பெற்று புதிய இயந்திரங்களை வாங்கும் நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ரிங் ஸ்பின்னிங், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மற்றும் ஏர்ஜெட் ஸ்பின்னிங் ஆகிய பிரிவுகளில் செயல்படும் நூற்பாலைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு, மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகத்துடன் 0421-2220095 என்ற எண்ணில் அல்லது rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.