ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’!

0

தமிழ் சினிமாவின் 80-களின் இறுதி காலமும் 90-களின் தொடக்கத்திலும் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன்.

அவர் நடித்த படங்கள் ரஜினி, கமல் படங்களுக்கு கூட கடும் போட்டியாக இருந்தன. கிராமிய பின்னணி, காதல், குடும்பக் கோணங்கள், மோதல், இசை என எல்லாம் கலந்து இருந்தது ராமராஜனின் சினிமா ஸ்டைல். இந்த மாதிரியாக உருவான அவரது பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அவற்றில் சிறப்பிடம் பிடித்தது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கரகாட்டக்காரன்.

மதுரையில் உள்ள நடனா திரையரங்கில் இது ஓராண்டுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடியது. சில இடங்களில் 200 நாட்கள் ஹவுஸ் புல்லாகவும் ஓடியது.

இப்படத்தை இயக்கியவர் கங்கை அமரன். இதில் ராமராஜன் “முத்தையா” என்ற கரகாட்டக் கலைஞராக நடித்திருக்கிறார். இதுவே நடிகை கனகாவின் அறிமுகப்படை படம். அவர் “காமாட்சி” என்ற கரகாட்டக் கலைஞியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம், அத்தை மகனுடன் காதலித்து வேதனைபடும் பெண்ணாக உருவாக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவைக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் கவுண்டமணி (தவில் கலைஞர்), செந்தில் (நாதஸ்வரக் கலைஞர்).

சந்தானபாரதி, சண்முகசுந்தரம், காந்திமதி, சந்திரசேகர், கோவை சரளா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை எளிமையானது – இரு கரகாட்டக் கலைஞர்களுக்கிடையே காதல் மலர்கிறது. குடும்பமும் சமூகப் பிரச்சினைகளையும் தாண்டி அவர்கள் இணைவதே கதை.

இந்தக் கதைக்கான உருவாக்கம் “தில்லானா மோகனாம்பாள்” படத்திலிருந்து வந்ததாக இயக்குநர் கங்கை அமரன் கூறியுள்ளார். கவுண்டமணி–செந்தில் ஜோடிக்கு இடையே இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் மக்களுக்கு மிகப் பிடித்திருந்தன.

வாழைப்பழ காமெடியும், “கன்னா பின்னா” வசனமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்தக் காட்சிகள் மலையாளப் படத்திலிருந்து முதன்முதலில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

“இந்தியாவிலேயே கார் வைத்திருக்கிற கரகாட்டக் குழு நம்மதான்” என்று சொல்வதிலும், அதற்குப் பிறகு செந்திலிடம் கேள்வி எழுப்பி அதற்கு வரும் பதிலில் ரசிகர்கள் சிரிப்பில் மூழ்குவது போன்ற தருணங்களும், படத்தின் வெற்றிக்கு வலுவாக அமைந்தன.

செந்தில் மற்றும் கோவை சரளாவின் காமெடி வசனங்கள் சிறப்பாகவே அமைந்தன.

இளையராஜாவின் இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

“இந்த மான் உந்தன் சொந்த மான்”, “மாங்குயிலே பூங்குயிலே”, “குடகு மலை காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா”, “மாரியம்மா”, “முந்தி முந்தி வினாயகரே”, “ஊரு விட்டு ஊரு வந்து” என அனைத்தும் தனித்துவமான இசையாக அமைந்தன.

துவக்கத்தில் இளையராஜா பாடிய “பாட்டாலே புத்தி சொன்னான்” எனும் பாடல், பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்தது. தவிர மற்ற பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ளார். இந்த பாடல்களில், படக்குழுவில் பணியாற்றியவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தில் கவுண்டமணி ஓட்டிய 1960 மாடல் செவர்லே இம்பாலா கார் கூட, பட வெளியீட்டுக்குப் பிறகு பிரபலமானது.

இந்தப் படத்தை விஜயா மூவீஸ் சார்பில் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை தயாரித்தனர். ஒளிப்பதிவு ஏ. சபாபதி.

மொத்தமாக வெறும் 28 நாட்களில் இப்படப்பிடிப்பு முடிக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம்.

1989 இல் இப்படம் வெளியானது. பின்னர் தெலுங்கில் கரகாட்ட கோபையா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here