மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் தனுஷ் நடித்த ‘சீடன்’ மற்றும் சசிகுமாரும் சூரியாவும் நடித்த ‘கருடன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தயாரித்து நடித்த மலையாளப் படம் ‘மார்கோ’, கடந்த வருடம் வெளியானதும் பெரிய வெற்றியைப் பெற்றது. ஹனீப் அதேனி இயக்கிய இந்த படமானது ரூ.120 கோடியைக் கடந்த வசூலுடன் சாதனை படைத்தது. இப்படம் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதிலுள்ள வன்முறைக் காட்சிகள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இருப்பினும், ‘மார்கோ’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என உன்னி முகுந்தன் அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், ‘மார்கோ 2’ குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த உன்னி முகுந்தன், “மார்கோ’ தொடரைத் தொடரும் யோசனையிலிருந்து விலகியுள்ளேன். அந்தப்படம் தொடர்பாக அதிக அளவிலான எதிர்மறை விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே, அதைவிட மேம்பட்ட ஒரு படத்தை உருவாக்க முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.