நடிகர் மற்றும் இயக்குநரான பசில் ஜோசப், “சக்திமான்” திரைப்படம் ரன்வீர் சிங் நடித்துதான் உருவாகும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கும் படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தற்போது மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதற்குப் பிறகு பசில் ஜோசப்பின் இயக்கத்தில் நடித்திட அவர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், பசில் ஜோசப்பின் இயக்கத்தில் உருவாகும் “சக்திமான்” படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கவிருப்பார் என சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.
இந்த தகவல்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன. சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் இதுபற்றிப் பசில் ஜோசப்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் பதிலளிக்கையில், “ரன்வீர் சிங் மட்டுமே ‘சக்திமான்’ படத்தில் நடிக்கிறார். இந்தத் திட்டம் தொடர்பான தவறான செய்திகளை சிலர் தங்கள் சுயநலத்துக்காக பரப்புகிறார்கள்” எனக் கூறினார். இதன்மூலம், அல்லு அர்ஜுன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியானது.
முன்னதாக, ரன்வீர் சிங் மற்றும் பசில் ஜோசப் கூட்டணியில் “சக்திமான்” உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல காரணங்களால் படம் தள்ளிப்போனது. தற்போது பசில் ஜோசப்பின் பேட்டியின் அடிப்படையில், விரைவில் அந்தத் திட்டம் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.