எஸ்எஸ்பிஎல் (சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) டி10 டென்னிஸ் பந்துக் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா ஆகிய ஆறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்த மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ.3 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆற்காட்டு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன், மற்றும் லீக் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் போட்டிக்கான லட்சினை மற்றும் கோப்பை வெளியிடும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு 68 மண்டலங்களில் நடக்கவுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வீரர்கள் தேர்வில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மொத்தமாக 300 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் ஏலத்தின் மூலம் 12 அணிகளுக்கும் ஒதுக்கப்படுவார்கள். ஏலத்தில் வீரரின் குறைந்தபட்ச விலை ரூ.1.5 லட்சம் என்றும், அதிகபட்சம் ரூ.3 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.