WhatsApp Channel
கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பண்டாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35). திருப்பத்தூரை அடுத்த சின்னகாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர் புகைப்படக் கலைஞராகவும், நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.
மாணவி ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்ராஜ் கொலைவழக்கில் ஈடுபட்டது தெரியவந்ததால் மாணவியின் தாய் ஜெயப்பிரதா ஜீவிதாவை சரண்ராஜ் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் கடந்த ஒரு வாரமாக சரண்ராஜ் ஜீவிதாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் அவருடன் பேசுவதை ஜீவிதா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவை வாயில் துணியால் கட்டி கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர், செல்போன் மற்றும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதி வைத்திருந்த குறிப்பையும் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் நாடறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்த நிலையில், நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கியிருந்த சரண்ராஜை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சரண்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post