WhatsApp Channel
கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். கேரளா பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது பெற்றோர் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஏன்? புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அசோக்கிற்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார். இதனையடுத்து, அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் எங்கே என்று விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த வீட்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post