WhatsApp Channel
சென்னை காவல்துறை வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பலர் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வக்கீல், ஐகோர்ட், தலைமை செயலகம், ராணுவம் என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணித்து வருகின்றனர். பயணிகளை பிடித்து விசாரணை நடத்தியதில், அதில் பல போலி என தெரியவந்தது. குற்றச்செயல்களில் இருந்து தப்பிக்க மனித உரிமை, பத்திரிக்கை, ஊடகம், வழக்கறிஞர்கள் என சிலர் வேடமணிந்து ரவுடிகள் இருப்பதும் காவல்துறையின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து, போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாகனத்தில் மீடியா, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதனால், போலீசாரின் கடும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. இதை மீறுவோர் மீது மே 2ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் சமமான ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்தது. ஊடகங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற தங்கள் தொழில் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை பணியாளர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். துறை சம்பந்தமில்லாதவர்கள் மீடியா, வக்கீல், டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் தடை நீடிப்பதாக போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதி அமலுக்கு வந்தது. சென்னை காவல்துறை வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
Discussion about this post