ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

0

பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் வாங்கும் போது ஏற்பட்ட ரூ.1.75 கோடி முறைகேடு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ் மற்றும் வள்ளலார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு.

2019-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள 8,790 கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஐந்து வகை பதிவேடுகள் வாங்கும் ஒப்பந்தத்தில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது என அரசின் கணக்காய்வுப் பிரிவு அறிக்கையிலுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி கூட்டுறவுக் கடை மேலாளர் வெள்ளையம்மாள் மற்றும் அவரது கணவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பால்வளத்துறையின் முன்னாள் அதிகாரிகள் காமராஜ் (இயக்குநர்), வள்ளலார் (ஆணையர்), கிறிஸ்துதாஸ் (கூடுதல் ஆணையர்) ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், காமராஜ் மற்றும் வள்ளலார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; கிறிஸ்துதாஸ் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஓய்விற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

கிறிஸ்துதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, பதிவேடுகள் வாங்கும் ஒப்பந்தத்தில் விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்படுகிறது எனக் கூறி, குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் காமராஜ் மற்றும் வள்ளலார் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும், மோசடியான ஒப்பந்தம் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மற்றும் சட்டவிரோதமாக பெற்ற தொகையை வெளிப்படுத்தி, கீழ்நிலை அதிகாரிகளின் பரிந்துரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மூத்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது அநியாயம் எனவும் கூறப்பட்டது. ஊழல் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதி முறைமைக்கு எதிரானது என்றும், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here