பாரதியார் பாடலால் மயங்கிய பார்வையாளர்கள் | ‘சிங்கா 60’ கலை விழா
சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் 9-ஆம் நாளான நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், பாரதியார் பாடல்கள் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், இந்தியாவோடு மற்றும் தமிழகத்தோடு கொண்டுள்ள நெருக்கமான கலாச்சார பிணைப்பை முன்னிட்டு, அதன் 60-வது தேசிய தினத்தை சிறப்பிக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’, ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து நடத்தும் 10 நாள் கலை விழா ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தொடங்கியது.
கலை, கலாச்சாரம், நாடகம், பொருளாதாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த விழா, அடையாறு பத்மநாபநகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில், இந்தியா–சிங்கப்பூர் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியுடன் துவங்கியது. சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் இதை தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 30 வரை நீளும் இந்தக் கண்காட்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த குமாரி நாகப்பன், பி. ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கவிதா பத்ரா உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று இரவு, ராஜா அண்ணாமலைபுரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கில் ‘பாரதியார் – பார்வையிலும், குரலிலும்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக, ‘நல்லிணக்கத்தில் பாரதியார்’ எனும் கருப்பொருளில், சிங்கப்பூர்–இந்தியா இசைக்குழுவினரின் கச்சேரி நடந்தது. இதில் காக்கைச் சிறகினிலே நந்தலாலா, மலரின் மேவு திருவே, மனதில் உறுதி வேண்டும், வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள், நல்ல காலம் வருகுது, வெண்ணிலாவே, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. பார்வையாளர்கள் மெய்மறந்து கேட்டதோடு, பலரும் சேர்ந்து பாடியும் உற்சாகம் காட்டினர்.
பின்னர், சவுந்தர்யா சுகுமார் ஐயர் தயாரித்த பாரதியாரின் ஆன்மிகப் பயணம் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில் பாரதியாரின் சிறுபருவம், காசியில் மேற்படிப்பு, நிவேதிதையுடன் சந்திப்பு, பெண் சமத்துவம் குறித்த புரிதல், பத்திரிகைத் துறையில் நுழைவு, தேசபக்திப் பாடல்கள், புதுச்சேரி பயணம், அரவிந்தருடன் சந்திப்பு போன்ற அரிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி, மாண்டலின் யூ ராஜேஷ், அனில் ஸ்ரீனிவாசன், சவுந்தர்யா சுகுமார் ஐயர், லலிதா வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கினர். ‘இந்து தமிழ் திசை’ தலைமைச் செயல் அதிகாரி சங்கர் வி. சுப்பிரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சிகளை இளங்கோ குமணன் தொகுத்து வழங்கினார்.
‘சிங்கா 60’ விழாவிற்கு சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கி ஆகியவை முக்கிய பங்குதாரர்களாகவும், டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பேயிண்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவை துணை பங்குதாரர்களாக உள்ளன.
இன்று நிறைவு
10 நாட்களாக சென்னைவாசிகளை பல்சுவை நிகழ்ச்சிகளால் கவர்ந்த ‘சிங்கா 60’ கலை விழா இன்று நிறைவடைகிறது. தி.நகர் தியாகராய சாலையில் உள்ள தி ரெஸிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்று வந்த சிங்கப்பூர் உணவுத் திருவிழாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.